தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோயில்,மடம், அறக்கட்டளைகள், தேவாலயங்கள், வக்ஃபோர்டுஇடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும்விவசாயிகள், சிறுகடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அவர்கள் அனுபவித்து வரும் அந்தந்த இடங்களைஒரு நியாயமான விலையை தீர்மானித்து அதை சம்பந்தப்பட்ட பயனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர்களுக்கே கிரயம் செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள், சிறு கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு வாடகை, குத்தகை தொகையை பல மடங்கு உயர்த்தி, உயர்த்திய தொகையினை ஒரே தவணையில் கட்ட சொல்லி பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது.
2001ஆம் ஆண்டிலிருந்து சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு வாடகை தீர்மானிக்கப்படுகிறது. தீர்மானிக்கப்பட்ட உயர்த்திய வாடகையை கட்ட தவறியவர்களை அறநிலைய சட்டப்பிரிவு 78, 79- ஐ பயன்படுத்தி வீடுகளுக்குசீல் வைப்பது, காலிசெய்வது, சில இடங்களில் குடியிருப்புவீடுகளை இடிப்பது போன்ற அராஜகமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இந்த நிலையில் தான் மாநில அரசு30.8.2019 வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்குவதற்கான அரசாணை 318- ஐ வெளியிட்டது.
அரசாணை 318ல் கோவில் இடம் குறித்து
அரசு புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு அந்த இடங்களை வரன்முறைப்படுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா இலவசமாக அரசு வழங்குகிறது. அந்த வகையில் முதல் முதலில் 30.8.2019ல் வெளிவந்த தமிழக அரசின் அரசாணை 318ல் உட்பிரிவு 5ல் பின் தங்கிய தகுதியானவர்களுக்கு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திற்குஉட்பட்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட்டது.
கோவில் நிலம் குறித்து அரசாணையில் கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமனங்கள் அதில்குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கி வரன்முறைப்படுத்தி அந்த நிலங்களை உரியவகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு அரசாணை (நிலை) எண் 200 வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முன்மொழிவுடன் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ளகோவில் வாரியாக தொகுக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வாயிலாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும் என தெளிவாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை 318க்கு எதிரான வழக்கு
அரசாணை வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே இந்த அரசாணையை தமிழக அரசு செயல்படுத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டுமென்று சங்பரிவாரத்தை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசாணை 318ல் உள்ள 5வது உட்பிரிவான கோவில் இடத்திற்கான பட்டா வழங்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை (22.11.2019) விதித்தது. இந்த இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசும், 10க்கும் மேற்பட்ட நபர்களும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோவில் இடத்தில் வசிக்கும் பயனாளியான தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த85 வயதான சி. ரங்கசாமி ஆசாணி என்பவர் தன்னை ஒரு வாதியாக இணைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் வழக்கில் சில விசாரணைகள் நடந்து தற்போதும் நிலுவையில் உள்ளது. அரசின் சார்பில் கூடுதலாக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் மிக தெளிவாக தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் பெயரில் உள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் அரசாணை318 ன் படி பட்டா வழங்க தமிழக அரசு வெறும் 600 ஏக்கர் நிலங்களை மட்டுமே கையகப்படுத்த உள்ளதாகவும், கையகப்படுத்தும் நிலங்களுக்கான கிரயத்தொகையை சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில் டெபாசிட் செய்த பிறகுதான் நிலங்களை எடுத்து பட்டா வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு
உயர்நீதிமன்றத்தில் அரசாணை 318 குறித்த வழக்கு தற்போது விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூரில் பழமையான கோவிலை சீரமைப்பது குறித்து ஒரு வழக்கிலும், சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு கோவிலின் நிலத்தைஅரசின் மீன்வளத்துறை பயன்படுத்துவது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகள் பல்வேறு கேள்விகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தும்விதமாக உள்ளன.முதலில் மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற கோவில் சீரமைப்பு குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள ஒரு செங்கற்களை கூட எடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளனர். இது எப்படி சரியாகயிருக்கும்.
பல நூற்றாண்டுகளாக உள்ள பழமையான கோவில்களை சீரமைப்பதற்கு, குடமுழுக்கு செய்வதற்கு அறநிலையத்துறைச் சட்டங்கள் அனுமதிக்கின்றன. கோவில்களை சீரமைத்து குடமுழுக்கு செய்வதற்கென்று கமிட்டிகள் அமைக்கப்படுகின்றன. அறநிலையத்துறை சார்பில் அரசாணையில் வெளியிடப்படுகிறது. தற்போது உயர்நீதிமன்ற மதுரைகிளையின் நீதிபதிகள் கருத்துக்கள் இதற்கு மாறாக உள்ளன. மேலும் அறநிலையத்துறை சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யுமோ என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சென்னை சின்ன நீலாங்கரை கோவில் இடம், சேலம்கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை கோயில் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும்கோவில் அல்லது பிற உபயோகத்திற்கும் பயன்பாட்டுக்காகமாற்றி தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது.
கோவில் நிலங்களில் நீண்ட காலமாக குத்தகை மற்றும் வாடகை அடிப்படையில் இருப்பவர்கள் அதற்காக அறநிலையத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை முறையாக செலுத்த வேண்டும். கோவில் நிலங்களை கோவில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 175க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட உத்தரவுபிறப்பித்துள்ளதோடு இந்த உத்தரவுகளை செயல்படுத்தியது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறி வழக்கு விசாரணையை 6 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
அச்சத்தை ஏற்படுத்தும் உயர்நீதிமன்ற உத்தரவு சரிதானா?
அரசாணை 318 குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் கோவில் நிலங்கள் குறித்தும், கோவில்களில் குடமுழுக்கு அல்லது சீரமைப்பதுகுறித்து தொடுக்கப்படும் பல்வேறு தனி நபர்கள் வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் அந்தந்த வழக்கு குறித்த உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்காமல் ஒட்டுமொத்ததமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களில் நிலங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதும், உத்தரவுகளை பிறப்பிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
மேலும் அரசு கொள்கை முடிவெடுத்து, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசாணை வெளியிடுகிறது. அப்படி வெளியிடப்பட்ட அரசாணை 318 தற்போது வழக்கு விசாரணையில் உள்ள போதே, அந்த வழக்கின் தீர்ப்பு இந்ததிசையில் தான் வரவேண்டும் என்ற நிலைபாட்டை உருவாக்குவது போல சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த தீர்ப்பு அமைந்துவிடுமோ என்ற அச்சம் சாதாரண ஏழை, எளிய கோவில் இடங்களில் குடியிருக்கும் பல லட்சம் பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அறநிலைய சட்டப்பிரிவு 34ல் கோவில் நிலங்களை தேவையை ஒட்டி, விற்பதற்கும் பரிவர்த்தனை செய்வதற்கும் சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கிறது. இந்த சட்டப்பிரிவை பயன்படுத்திதான் திருப்பூரில் 8 ஏக்கர்கோவில் இடம் காவல்துறைக்கு சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில்வேறு பயன்பாட்டிற்கு எடுக்கக்கூடாது என்பது எப்படி சரியாகும்? அப்படியென்றால் அறநிலையத்துறை சட்டங்கள் எதற்கு? அது அப்படியே சட்டமாக மட்டும் இருக்க வேண்டுமா? இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து, இதுவரை சுமார் 27 முறை சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் சட்டப்பிரிவு 34 இன்று வரை தொடர்கிறது. தமிழக அரசு ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும் இந்த சட்டப்பிரிவு 34ன் படி தான் உரிய தொகையை செலுத்திய பின்பு நிலத்தை கையகப்படுத்துவது என அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, கோவில் நிர்வாகங்களை நடத்துவதற்கும்,சொத்துக்களை பராமரிப்பதற்கும், அறநிலையத்துறைக்கென்று தனி சட்டங்களும், பல்வேறு நிலையில் அதிகாரிகளும் உள்ள நிலையில் அதில் உள்ள நிர்வாக ரீதியானகுறைபாடுகளை சரி செய்ய, நீதிமன்றங்கள் தலையிடுவது சரியானதே. ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் முன் வைக்கும் இந்து கோவில்களைஎங்களிடமே ஒப்படைக்க வேண்டும், அறநிலையத்துறையே வேண்டாம் என்ற கருத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தின் உத்தரவுகள் மாறிவிடக்கூடாது என வேண்டுகிறோம்.அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பல பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. அவற்றில் பல்வேறுவழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யும் நீதிமன்றங்கள், குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் குறித்து பல்வேறு வழக்குகளிலும், வேறுசில அரசின் கொள்கை முடிவுகள் குறித்து வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கும் உயர்நீதிமன்றம் இது அரசின் கொள்கை முடிவு. நீதிமன்றம் தலையிட முடியாது என கடந்த காலங்களில் பல்வேறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில்கோவில் இடத்தில் பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள் பிறக்கும் போதே பட்டா இல்லாத இடத்தில் பிறந்து வாழ்ந்து தன் ஆயுள் காலத்தை முடித்து இறக்கும் போதும்பட்டா இல்லாத இடத்திலேயே இறக்கும் அவல நிலையைமாற்ற வேண்டாமா? அதற்கு ஒரு சிறிய முதற்படியாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கு அரசாணை 318 ன் படி கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு எடுத்த கொள்கை முடிவுக்குமட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்?
கட்டுரையாளர் :.சாமி.நடராஜன், மாநில அமைப்பாளர், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம்.